கடலில் தவறி விழுந்து மீனவர் பலி


கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
x

மீன்பிடித்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.

புதுக்கோட்டை

கடலில் தவறி விழுந்த மீனவர்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியய்யா மகன் ராமநாதன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (45). இவர்கள் 2 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வண்ணச்சப்பட்டினம் பகுதியில் தங்கி இருந்து பைபர் படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் வழக்கம் போல் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். 2 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது ராமநாதன் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உள்ளார்.

பிணமாக மீட்பு

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தர் அவரை மீட்க முயன்றார். ஆனால் அவர் கடலில் மூழ்கினார். இதையடுத்து, கடலோர காவல் குழுமம் மற்றும் மீனவர்களுக்கு சுந்தர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மூழ்கிய மீனவரை தேடி கடலுக்குள் சென்றனர். அப்போது கோட்டைப்பட்டினம் பகுதிக்கு நேராக படகு ஒன்று நின்றுள்ளது. அதில் மீனவர் சுந்தர் இருந்துள்ளார். பின்னர் அவரிடம் விசாரித்தபோது ராமநாதன் தவறி விழுந்த இடத்தை அவர் அடையாளம் காட்டினார். அந்த இடத்தில் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் பல மணி நேரம் தேடினர். பின்னர், ராமநாதனை அவர்கள் பிணமாக மீட்டனர்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய கடலோர காவல் குழுமத்தினர் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலியான ராமநாதனுக்கு வினிதா (28) என்ற மனைவி உள்ளார்.


Next Story