மீஞ்சூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி; உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்


மீஞ்சூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி; உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்
x

மீஞ்சூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார். அவரது உடலை உறவினர்கள் சாலையில் வைத்து போராட்டம் செய்தனர்.

திருவள்ளூர்

மீன் பிடிக்க சென்றபோது...

மீஞ்சூர் அடுத்த எண்ணூர் மீனவகுப்பத்தில் வசித்து வந்தவர் விக்னேஷ் (வயது 32). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விக்னேஷ் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை விக்னேஷ் எண்ணூர் கடல் கழிமுக பகுதிக்கு மீன்பிடிக்க படகில் சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விக்னேஷ் உறவினர்கள் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் மீனவர்களின் உதவியுடன் எண்ணூர் கழிமுக பகுதியில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் விக்னேஷின் உடல் பிணமாக அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மீனவர்களின் உதவியுடன் போலீசார் உடலை மீட்டு கறைக்கு கொண்டு வந்தனர்.

சாலைமறியல்

இதையடுத்து அவரது உறவினர்கள் விக்னேஷ் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இறந்த மீனவருக்கு உரிய இழப்பீடு வழக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலரிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வகுமார் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் விக்னேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் படகு கவிழ்ந்து இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story