(8 காலம்)துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்


(8 காலம்)துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:45 PM GMT)

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்தார். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

ராமநாதபுரம்

காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகில் 10 பேர் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் குறிப்பிட்ட நாட்கள் படகிலேயே தங்கி இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பது வழக்கம்.

துப்பாக்கிச்சூடு

நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். பங்காரா என்ற கப்பல் ரோந்து வந்தது.

10 மீனவர்கள் இருந்த மீன்பிடி படகு மீது இந்திய கடற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். அந்நேரம் நடுக்கடலில் மழை பெய்து கொண்டிருந்ததால் கடற்படையினரின் எச்சரிக்கையை கவனிக்காமல் மீனவர்களின் படகு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த இந்திய கடற்படையினர், கப்பலில் இருந்தபடியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மீனவர் படுகாயம்

இதில் படகில் இருந்த மீனவர் வீரவேல் (வயது 32) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் படகிலேயே சுருண்டு விழுந்தார்.

விபரீதம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த படகின் அருகில் வந்து பார்த்த இந்திய கடற்படையினர், நிலைமையை உணர்ந்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவசர நிலையை உணர்ந்து உச்சிப்புளியில் இருந்து கடற்படை விரைந்து சென்றது. நடுக்கடலில் படகில் உயிருக்கு போராடிய வீரவேலை உடனடியாக மீட்டு ஹெலிகாப்டரில் ஏற்றி உச்சிப்புளி கடற்படை விமான தளத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவருக்கு மீண்டும் முதல் உதவி அளித்து, தயார் நிலையில் நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மீனவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். வீரவேலின் உடலில் 2 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது தெரியவந்தது.

கலெக்டர் ஆறுதல்

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை ஆகியோர் பாதிக்கப்பட்ட மீனவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விசாரித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வீரவேல் கொண்டு வரப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர் என 10 மீனவர்கள் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் 21-ந் தேதி (நேற்று) மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படை கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மிகுந்த வருத்தம்

இதில் வீரவேல் என்ற மீனவரின் வயிறு மற்றும் தொடையில் குண்டு பாய்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தில் இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நிதானத்துடன்...

இந்திய கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.

எனவே நீங்கள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாள்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடற்படை விளக்கம்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

வங்காள விரிகுடாவில், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இந்திய எல்லை பகுதியில், இந்திய கடற்படை கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும்படியாக படகு ஒன்று சென்றதாகவும், அந்த படகை நிறுத்த பலமுறை எச்சரித்தும், அந்த படகு நிற்காமல் சென்றது.

இதனால் படகில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக கப்பலில் இருந்தபடி துப்பாக்கியால் சுட்டதில் படகில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

முதல் உதவி சிகிச்சை

இதை அறிந்து அங்கு சென்று, கப்பலில் வைத்து அந்த மீனவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக கடற்படை விமானதள ஹெலிகாப்டர் மூலம் மீனவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், பின்னர் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

காயம் அடைந்த மீனவர் வீரவேல், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இதுபற்றி அறிந்ததும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

மீனவர்கள் வேதனை

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. தற்போது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி, அதில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story