மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கோவில், வீடுகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு


மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கோவில், வீடுகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 April 2023 11:30 PM GMT (Updated: 25 April 2023 11:31 PM GMT)

மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள கோவில், வீடுகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செங்கல்பட்டு

ஆளவந்தார் அறக்கட்டளை

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம், நெம்மேலி, புதுக்கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. சில பகுதிகளில் ஆளவந்தார் அறக்கட்டளையின் நிலத்தை ஆக்கிரமித்து பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், வழி பாதைகள் உள்ளிட்டவைகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கோவில்களுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்டு, அதுபற்றிய அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

வீடுகள், கோவில்களை அகற்ற சென்றனர்

இதையடுத்து பட்டிபுலம் மீனவர் கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் சுனாமி திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த வெங்கடேசன் வீடுகள் கட்டிக்கொள்ள ஆணை பிறப்பித்ததாகவும், ஆனால் வீட்டு மனைபட்டா வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து பட்டிபுலம் மீனவர் பகுதியில் தங்கள் அறக்கட்டளை நிலத்தில் உள்ள வீடுகள் மற்றும் கோவில்களை தாங்களாகவே அகற்றி கொள்ள, மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம் அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியது.

கெடு தேதி முடிந்த நிலையிலும் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளாததால் கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில், அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள 18 விடுகள், கோவில்களை (அம்மன் மற்றும் விநாயகர் கோயில்) அகற்ற சென்றனர். அப்போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வாக்குவாதம்

அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றபோது பட்டிபுலம் மீனவர் குப்பம் நுழைவு வாயில் பகுதியிலேயே பட்டிபுலம் ஊராட்சிமன்ற தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன், ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, வார்டு கவுன்சிலர் தனலட்சுமிவேதகிரி உள்ளிட்ட மீனவர்கள் பெண்கள் என 100 பேர் அதிகாரிகளை சூழ்ந்து மீனவர் பகுதிக்கு உள்ளே செல்லவிடாமல் வழிமறித்து, 2005-ம் ஆண்டில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு வழங்கி சுனாமி திட்டத்தில் 18 வீடுகள், கட்டி கொடு்க்கப்பட்டு உள்ளதாகவும், அரசு கட்டி கொடுத்த வீட்டை எப்படி நீங்கள் அகற்ற வரலாம், தாங்களும் கோர்ட்டை நாட உள்ளோம். அதுவரை வீடுகள், கோவில்களை அகற்ற கூடாது என்று கூறி அதிகாரிகளுடன் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 2 மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சலிட்ட மீனவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பிறகு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 18 வீடுகள், கோவில்களை இடிக்காமல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்திக்கவும், கோர்ட்டை நாடவும் ஒரு மாதம் அவர்களுக்கு கால அவகாசம் அளித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றதை காண முடிந்தது.


Next Story