பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை கடலூர் துறைமுகத்தில் பரபரப்பு


பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க கோரி    மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை    கடலூர் துறைமுகத்தில் பரபரப்பு
x

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க கோரி கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்ட கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுகள் மற்றும் சுருக்குமடி வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி படகில் மீன் பிடித்த ராசாபேட்டை மீனவ கிராமத்தை மீனவர்கள் சிலரின் படகுகள், சுருக்குமடி வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராசாபேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி மீனவளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story