4-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்


4-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:45 PM GMT)

இலங்கை சிறையில் உள்ள 27 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் 4-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் இருந்து கடந்த 14-ந் தேதி மீன் பிடிக்க சென்ற 5 படகுடன் 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் 27 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கடந்த 16-ந் தேதியில் இருந்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நேற்று நீடித்தது. இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் அணி வகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரூ.4 கோடி இழப்பு

கடந்த 4 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசுக்கு ரூ.4 கோடி வரையில் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் துறைமுக கடற்கரை பகுதியே வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

இதனால் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story