மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்


மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Aug 2023 7:30 PM GMT (Updated: 1 Aug 2023 7:31 PM GMT)

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுருக்குமடி வலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சம்பவத்தன்று தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த மீனவர்கள் 3 பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து தரங்கம்பாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை மற்றும் பொறையாறு போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு பொறையாறு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். படகில் இருந்த மீன்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலம் விடப்பட்டது.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

இந்த நிலையில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, தாழம்பேட்டை, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கூழையாறு, கொடியம்பாளையம் சாவடி குப்பம், சின்னகொட்டாய்மேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்த பகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Next Story