கனவா, கிளிச்சல் வகை மீன்கள் மட்டும் சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றம்


கனவா, கிளிச்சல் வகை மீன்கள் மட்டும் சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:45 PM GMT)

மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலூா் துறைமுகத்திற்கு 25 டன் மீன்கள் வரத்து இருந்தபோதிலும் கனவா, கிளிச்சல் வகை மீன்கள் மட்டுமே சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனா்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 15-ந் தேதி முதல் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனா்.

அந்த வகையில் கடலூர் துறைமுகம் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் தடைக்காலம் முடிந்ததும் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர். இதில் அவர்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்தனர்.

மீனவா்கள் ஏமாற்றம்

அப்போது மீனவர்களின் வலையில் கனவா மற்றும் கிளிச்சல் வகை மீன்கள் அதிகளவில் சிக்கியது. இதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். இதில் நேற்று ஒரே நாளில் கனவா மீன்கள் 15 டன் அளவுக்கும், கிளிச்சல் மீன்கள் 10 டன் அளவுக்கும் வரத்து இருந்தது. ஆனால் மக்கள் விரும்பி வாங்கக்கூடிய கவளை, கானாங்கத்தை, சங்கரா போன்ற மீன்கள் மீனவர்கள் வலைகளில் சொற்ப அளவிலேயே சிக்கின. இதனால் எதிா்பாா்த்த மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ரூ.150-க்கு விற்பனை

கனவா மீன்வரத்து அதிகமாக இருந்ததால், வழக்கமாக கிலோ ரூ.250-க்கு விற்கப்படும் கனவா நேற்று ரூ.150-க்கு விற்பனையானது. இதனால் கனவா மீன்களை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காணமுடிந்தது.

அதேபோல் கிளிச்சல் மீன் ஒரு கிலோ ரூ.17-க்கு விற்கப்பட்டது. இதனை மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தினர் வாங்கிச் சென்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மிகுந்த ஆர்வத்துடன் நாங்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம்.

நீரோட்ட மாற்றம்

ஆனால் கடலில் ஏற்பட்ட நீரோட்ட மாற்றம் காரணமாக நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிக வகையிலான மீன்கள் சிக்கவில்லை. கனவா, கிளிச்சல் மீன்கள் தான் அதிகளவில் சிக்கியது.

இதில் கனவா மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனையானது. அதேபோல் கிளிச்சல் மீன்கள் கோழி தீவனத்திற்கும், மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் மட்டுமே வாங்குவார்கள். அதனால் அதுவும் குறைந்த விலைக்கு விற்பனையானது. இருப்பினும் வரும் நாட்களில் நீரோட்டம் சரியாகும் பட்சத்தில் எங்களுக்கு அதிக வகையிலான மீன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம் என்றனர்.


Next Story