வேதாரண்யத்தில் கடல் சீற்றம்:3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


வேதாரண்யத்தில் கடல் சீற்றம்:3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 24 Jan 2023 7:15 PM GMT (Updated: 24 Jan 2023 7:15 PM GMT)

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம் மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்கள் பைபர் படகுகள் எனப்படும் சிறிய வகை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. கடலிலும் சூறைக்காற்று வீசியது. கடல் சீற்றமாகவும் காணப்பட்டதால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வாரக்கணக்கில் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மட்டுமின்றி மீன்பிடி தொழிலை நம்பி உள்ள ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வந்தனர்.

கடல் சீற்றம்

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து தற்போது பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

நேற்று 3-வது நாளாக கடல் கடும் சீற்றமாக இருந்தது. இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள ஏராளமானோர் வேலை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.


Next Story