நக்கம்பாடி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா


நக்கம்பாடி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா
x

நக்கம்பாடி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் விவசாய பாசனத்திற்கான பெரிய ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் அந்த ஏரி நிரம்பியது. இதையடுத்து விவசாயிகள் அந்த ஏரியில் இருந்து பாசன நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினர். இதனால் ஏரியில் படிப்படியாக தண்ணீர் வற்ற தொடங்கியது. இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெறாத நிலையில், தற்போது இந்த ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இது தொடர்பாக சுற்றுப்புற கிராமங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் நக்கம்பாடி பெரிய ஏரிக்கு நம்மங்குணம், சொக்கநாதபுரம், பெருமாண்டி, நல்லநாயகபுரம், வஞ்சனபுரம் மற்றும் செந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்தனர். மேலும் நக்கம்பாடி ஏரியில் பூஜைகள் செய்யப்பட்டு, கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதில் கிராம மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏரியில் இறங்கி, தாங்கள் கொண்டு வந்த கத்தா மற்றும் வலைகளை பயன்படுத்தி ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, விறால், குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். பிடிபட்ட மீன்கள், சுமார் 5 கிலோ வரை எடை கொண்டதாக இருந்தது. இந்த மீன்பிடி திருவிழாவில் சுமார் ஆயிரம் கிலோவிற்கு மேல் மீன்கள் சிக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story