போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு இன்று உடல் திறன் தேர்வு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு இன்று உடல் திறன் தேர்வு
x

சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் திறன் தேர்வு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு நேற்று முடிந்தது.

444 பதவி இடங்கள்

தமிழக போலீஸ்துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. 197 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 487 பேர் எழுதினர். விண்ணப்பித்து இருந்தவர்களில் 37 ஆயிரத்து 812 பேர் எழுதவில்லை.

சென்னை போலீஸ்துறைக்குட்பட்ட பகுதியில் 6 ஆயிரத்து 346 பேரும், தாம்பரம் போலீஸ்துறைக்குட்பட்ட பகுதியில் 6 ஆயிரத்து 334 பேரும், ஆவடி போலீஸ்துறைக்குட்பட்ட பகுதியில் 6 ஆயிரத்து 373 பேரும் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.

உடல்தகுதி தேர்வு

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு அந்தந்த மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை போலீஸ்துறைக்குட்பட்ட பகுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை நேரடியாக பங்கெடுத்து தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு பகலிலும், தேர்ச்சியடைந்த போலீஸ்துறையை சேர்ந்தவர்களுக்கு மதியமும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதன்பின்னர் 1,500 மீட்டர் இலக்கை 7 நிமிடங்களில் அடைய வேண்டும் என்ற வகையில் ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று இதே மைதானத்தில் நீளம்-உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு ஏறுதல் போன்ற போட்டிகளுடன் உடல்திறன் தேர்வு நடைபெற இருக்கிறது.

பயிற்சி

இதிலும் வெற்றி வாகை சூடுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் முத்திரை பதிப்பவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிக்கு பின்னர் அவர்களுக்கு போலீஸ் நிலைய பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story