கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடி ஏற்றினார்


கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடி ஏற்றினார்
x

சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடியை ஏற்றினார்.

சிவகங்கை


சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடியை ஏற்றினார்.

சுதந்திர தின விழா

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழா நடைபெற்ற மைதானத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வரவேற்று அழைத்து வந்தார். காலை 9.05 மணிக்கு கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்.

தொடர்ந்து ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் அணிவகுத்து வந்து மரியாதை செய்தனர். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இருந்த இடத்திற்கே சென்று கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்னர் 37 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 55 லட்சத்து 72 ஆயிரத்து 590 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சான்றிதழ்

மேலும் அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 90 போலீசார் உள்பட சிறப்பாக பணிபுரிந்த 547 பேருக்கு சான்றிதழ், கேடயங்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணிபாஸ்கரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் சிவகங்கை நகர்ப்பகுதியில் உள்ள தியாகிகளின் வீடுகளுக்கு கலெக்டர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சிவகங்கை மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் தியாகிகளுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

கலைநிகழ்ச்சி

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலர் ஏ.எம்.சேகர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவையொட்டி நடந்த கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், முத்துமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் மணி பாஸ்கரன் தேசியகொடி ஏற்றிவைத்தார். விழாவில் மாவட்ட ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story