கடலூர் மாநகராட்சியில் குப்பை கிடங்காக மாறி வரும் குடியிருப்புகள்


கடலூர் மாநகராட்சியில் குப்பை கிடங்காக மாறி வரும் குடியிருப்புகள்
x
தினத்தந்தி 24 Jun 2023 9:56 PM GMT (Updated: 25 Jun 2023 2:04 AM GMT)

கடலூர் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள் குப்பை கிடங்காக மாறி வருகிறது. குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.

கடலூர்

கடலூர் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள் குப்பை கிடங்காக மாறி வருகிறது. குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.

குப்பை கிடங்கு

கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து தினசரி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இந்த குப்பை கிடங்குகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன.

அதன் பிறகு மாநகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு அமைக்க, இதுவரை இடம் தேர்வு செய்யவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடை வீதிகளில் துப்புரவு பணியாளர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை அந்தந்த பகுதியிலேயே மொத்தமாக கொட்டி தீ வைத்து கொளுத்தி வருகின்றனர்.

அல்லல்படும் மக்கள்

மேலும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் கெடிலம் ஆற்றங்கரையிலும், திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலையோரமும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளுக்கு குப்பை சேகரிக்க பணியாளர்கள் யாரும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை, வேறு வழியின்றி சாலையோரம் கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.

இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றத்தால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.

எனது குப்பை, எனது பொறுப்பு

இதேபோல் 'எனது குப்பை, எனது பொறுப்பு' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு குடியிருப்பு பகுதியிலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்காக, இந்த பணி நடைபெறவில்லை. பொது இடங்களில் மட்டுமே அவ்வவ்போது கண்துடைப்புக்காக தூய்மை பணிகள் நடைபெறுகிறது.

குப்பை மேடு

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் தெருவோரத்தில் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் காலை நேரத்தில் தெருக்கள் அனைத்தும் புகை மண்டலமாக காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக குப்பை சேகரிக்க யாரும் வரவில்லை. இதனால் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகிறோம். இந்த நிலையில் கிளீன் சிட்டி என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடலூர் மாநகராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் குப்பை மேடாக தான் காட்சி அளிக்கிறதே தவிர, கிளீன் சிட்டி ஆவதற்கு எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. அதனால் குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, தினசரி குப்பை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story