திருவாரூரில், பூக்கள் விலை உயர்வு 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200- க்கு விற்பனை


திருவாரூரில், பூக்கள் விலை உயர்வு 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200- க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Feb 2023 7:15 PM GMT (Updated: 4 Feb 2023 7:15 PM GMT)

திருவாரூரில் தைப்பூச விழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200- க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருவாரூர்

திருவாரூரில் தைப்பூச விழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200- க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூச்சந்தை

திருவாரூரில் உள்ள கடைவீதியில் ஏராளமான பூ கடைகள் உள்ளன. திருவாரூர் பூ மார்க்கெட்டிற்கு தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். இதே போல மழை காலத்திலும், பனிக்காலத்திலும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால், வரத்து குறைவாக இருக்கும். இதனால் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும்.

தைப்பூச விழா

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் விழா கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு திருவாரூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் மக்கள் அதிக அளவில் வந்து வாங்கி சென்றனர். இதனால் பூக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருவாரூர் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக முல்லை பூ கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டது. நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வந்தி ரூ.100, அரளி ரூ.250, ஆப்பிள் ரோஸ் ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், காக்கரட்டான் ரூ.600-க்கும், கிலோ ரூ.700-க்கு விற்பனையான மல்லிகை பூ ரூ.1,200-க்கு விற்பனையாகின.

மாலை விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வால் மாலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. ரூ.70 முதல் ரூ.300 வரை விற்பனையான ரோஸ் மாலை நேற்று ரூ.100 முதல் ரூ.500- வரை விற்பனையானது. செவ்வந்தி மாலை ரூ.70-க்கும், சென்டி மாலை அதன் அளவுக்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நாளை (இன்று) தைப்பூச விழா என்பதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகை பூக்களின் மொட்டுக்கள் செடியிலேயே கருகி உள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் தேய்பிறை ஆரம்பிப்பதால் பூக்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story