தமிழ் புத்தாண்டையொட்டிபூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு


தமிழ் புத்தாண்டையொட்டிபூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும் என்பதால், நாமக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

பூக்கள் விலை விவரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

ஆனால் சமீப காலமாக நாமக்கல் மாவட்டத்தில் விளையும் பூக்களை விவசாயிகள் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சற்று குறைந்து உள்ளது. இதற்கிடையே நேற்று தமிழ்புத்தாண்டை யொட்டி நாமக்கல்லில் பூக்கள் விலை சூடுபிடித்தது. வியாபாரிகள் போட்டி, போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.கடந்த வாரம் கிலோ ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.600-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ.660-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கோவில்களில் சிறப்பு பூஜை

இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ.200-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது.

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பரமத்திவேலூர்

இதேபோல் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.200-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.400-க்கும் ஏலம் போனது.

தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.660-க்கும், சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், அரளி கிலோ ரூ.320-க்கும், ரோஜா கிலோ ரூ.260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.260-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.900-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.600-க்கும் ஏலம் போனது. தமிழ் புத்தாண்டையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story