பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு


பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x

சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும் என்பதால், நாமக்கல்லில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

பூக்கள் விலை விவரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

ஆனால் சமீப காலமாக நாமக்கல் மாவட்டத்தில் விளையும் பூக்களை விவசாயிகள் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சற்று குறைந்து உள்ளது. இதற்கிடையே சித்ரா பவுர்ணமியையொட்டி நாமக்கல்லில் பூக்கள் விற்பனை சூடுபிடித்தது. வியாபாரிகள் போட்டி, போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.

கடந்த வாரம் கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.480-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ.280-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கோவில்களில் சிறப்பு பூஜை

இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ.120-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ.200-க்கும் விற்பனையானது.

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். சமீபத்தில் பெய்த கோடைமழை காரணமாக பூக்கள் கொட்டி உற்பத்தி குறைந்து இருப்பதும் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.


Next Story