கும்பகோணத்தில் பூக்களின் விலை உயர்வு


கும்பகோணத்தில் பூக்களின் விலை உயர்வு
x

கும்பகோணத்தில் பூக்களின் விலை உயர்வு

தஞ்சாவூர்

முகூர்த்த தினத்தையொட்டி கும்பகோணத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூ மார்க்கெட்

கும்பகோணம் பெரியகடை தெரு, கும்பேஸ்வரர் கோவில் கீழவீதி, பெற்றாமரை குளத்தின் வடகரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. இந்த பூக்கடைகளுக்கு திண்டுக்கல், திருச்சி, நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தினமும் டன் கணக்கில் பூக்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். கும்பகோணத்தில் பூக்கள் விலை அடிக்கடி ஏற்றம் இறக்கமாக மாறி வருகிறது.

முகூர்த்த நாட்கள்

திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும். அதன்படி தொடர்ந்து 2 நாட்கள் முகூர்த்தநாட்கள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பூக்கள் விலை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ரூ.300-க்கு விற்பனை செய்த 1 கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.500-க்கு விற்பனையானது. அதேபோல் ரூ.200-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.500-க்கும், ரூ.200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.500-க்கும், ரூ.300-க்கு விற்ற சம்மங்கிப்பூ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.150-க்கு விற்ற அரளி ரூ.200-க்கும், ரூ.150-க்கு விற்ற செவ்வந்திப்பூ ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்ற ரோஜாப்பூ ரூ.200-க்கும் விற்பனையானது.

மக்கள் கூட்டம் அதிகம்

இதேபோல் அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. பூக்களின் விலை அதிகரித்து இருந்தாலும் முகூர்த்த தினம் என்பதால் பூக்களை வாங்கி செல்ல மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பூந்தோட்டம் பல இடங்களில் அழிந்துவிட்டது. தற்போது பூக்களின் வரத்து குறைவாகவே இருக்கிறது. முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்தாலும் மக்களும் அதிகஅளவில் வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.


Next Story