டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை


டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
x

கரூரில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கரூர்

ஆசிரியர் தினவிழா

சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இந்தியாவின் 2-வது ஜனாதிபதியும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி கரூர் கொளந்தாகவுண்டனூரில் உள்ள தேவி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தங்களது குருவான ஆசிரியர்களை வணங்கி அவர்களுக்கு மாணவ-மாணவிகள் பரிசுகள் வழங்கினர். இதில் தலைமை ஆசிரியர் ராஜா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பரிசு

இதேபோல் தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுக்கு பேனாவை பரிசாக வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கரூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.


Next Story