தீவனப்புல் உற்பத்தி


தீவனப்புல் உற்பத்தி
x

கும்பகோணத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் தீவனப்புல் உற்பத்தி செய்கின்றனர்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் தீவனப்புல் உற்பத்தி செய்கின்றனர்.

இயற்கை உரம் தயாரிப்பு

கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான தாராசுரம் காய்கறி மார்க்கெட், கும்பகோணம் பெருமான்டி கழிவு பொருட்கள் சேகரிக்கும் மையம், கும்பகோணத்தை அடுத்த கரிக்குலம் நகர்ப்புற குப்பைகள் சேகரித்து தரம் பிரிக்கும் மையம் ஆகிய பல்வேறு இடங்களில் இயற்கை கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த உரத்தை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கும்பகோணத்தில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பசு மாட்டிற்கு அளிக்கப்படும் தீவனப்புல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலர் இந்த இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தி தீவனப்புல் உற்பத்தி செய்து வருகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீவனப்புல் அதிக அளவு சத்துக்களுடன் மிக வேகமாக வளர்ந்து கால்நடைகளுக்கு பயன்பட்டு வருகிறது.

சத்துக்கள் கிடைக்கும்

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

தற்போது மாடுகளுக்கு புல் கிடைப்பது மிக அரிதாக உள்ளது. நெல் சாகுபடி மூலம் கிடைக்கின்ற வைக்கோல் மாட்டின் பசியை நிவர்த்தி செய்யுமே தவிர தேவையான சத்துக்கள் கிடைக்காது. ஆனால் கோ-4 கோ-5 போன்ற புல் வகைகளில் மாடுகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை சார்பில் எங்களுக்கு தீவனப்புல் விதைக்கரணைகள் அளிக்கப்பட்டன.

அந்த கரணைகள் மூலம் தீவனப்புல் உற்பத்தி செய்து எங்கள் அருகே உள்ள மாடுகளுக்கு வழங்கி வருகிறோம். இதற்காக நாங்கள் யூரியா, பொட்டாஷ் போன்ற செயற்கை உரங்களை பயன்படுத்துவது கிடையாது.

புல்லின் வளர்ச்சி நன்கு வளரும்

கும்பகோணம் மாநகராட்சியின் சார்பில் இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் உரங்களை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 5 டன் வரை உரம் அளித்தால் சுமார் 25 டன் தீவனப்புல் செழிப்பாக வளர்கிறது. இதனால் கால்நடைகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தீவனப்புல் நன்கு லாபம் தரும் தொழிலாகவும் உள்ளது.

நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து விவசாயிகள் தீவனப்புல் போன்ற மாற்றுப்பயிர்களை பயிர் செய்தால் அவர்களது நிலம் நன்கு வளப்படும். குறிப்பாக கும்பகோணம் மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரங்களை இலவசமாக வாங்கி பயிருக்கு உரம் இட்டால் மண்ணின் வளம் பாதுகாப்பதோடு புல்லின் வளர்ச்சியும் நன்கு வளர்ந்து கூடுதல் எடை கிடைக்கும் என்றார்.


Next Story