சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை


சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
x

சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி

சவர்மா கடைகளில் சோதனை

நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் கடந்த 16-ந் தேதி சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சியில் தில்லைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சவர்மா கோழிக்கறி மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யும் 21 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் கெட்டுப்போன 140 கிலோ அசைவ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. இதில் 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் 6 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஜூஸ்போட அழுகிய பழங்கள் வைத்திருந்த ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.

குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது

இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், "சவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. சோதனையின்போது, அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்களது பகுதியில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறினார்.

1 More update

Next Story