கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை


கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
x

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.

அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளது.


Next Story