1,124 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்


1,124 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:47 PM GMT)

திருவேங்கடம் அருகே அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க விழாவில் 1,124 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க விழாவில் 1,124 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

கூட்டுறவு கடன் சங்கம்

திருவேங்கடம் தாலுகா ஆலமநாயக்கர்பட்டியில் அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

வைகோ எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் உழவர்களுக்கான கடன் 132 பேருக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 6 ஆயிரம், கால்நடை பராமரிப்புக்கு 18 பேருக்கு 13 லட்சத்து 3 ஆயிரம், மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 953 பெண்களுக்கு ரூ.4 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரம், தானிய ஈட்டுக் கடன் 14 பேருக்கு ரூ.55 லட்சத்து 82 ஆயிரம், சிறு வணிக கடன் 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் உள்பட மொத்தம் 1,124 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 80 லட்சத்து 22 ஆயிரம் கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

நிகழ்ச்சியில் துரை வைகோ பேசுகையில், 'கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சில காரணங்களால் கலைக்கப்பட்ட அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மீண்டும் தொடங்கப்படும் என்று மக்களுக்கு நான் உறுதியளித்தேன்.

இதுதொடர்பாக அமைச்சர்கள் ஐ.ெபரியசாமி, பெரியகருப்பன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தேன். அதன்பேரில் தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக அமைச்சர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சென்னை சண்முகசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சுபாஷினி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி, மதுரை ஐகோர்ட்டு அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ், மாவட்ட குழு உறுப்பினர் தேவி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தற்காலிக நிர்வாக குழுவினர் தலைவர் கணேஷ் குமார், துணைத் தலைவர் மாரியப்பன், தி.மு.க. துணைச் செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், சேர்மதுரை, கடற்கரை, பெரியதுரை, வெற்றி விஜயன், திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பாலமுருகன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சரவணன், மாவட்ட இளைஞர் அணி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்திரப்பட்டி அய்யலுசாமி, கலிங்கப்பட்டி மணிமொழி சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், தென்காசி சரக கூட்டுறவு கடன் சங்கங்களின் இணைப்பதிவாளர் லட்சுமண குமார் நன்றி கூறினார்.


Next Story