பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடக்கிறது


பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடக்கிறது
x
தினத்தந்தி 13 Jun 2023 6:45 PM GMT (Updated: 14 Jun 2023 12:20 PM GMT)

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான 2022-23-ம் ஆண்டிற்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 28-ந்தேதி முத்துதேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மெட்ரிக் பள்ளியில் காலை 10 மணியளவில் நடக்கிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து அவரவர் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன், போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொருப் போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் காசோலையாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story