3-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை


3-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை
x

கரூர் மணல் குவாரியில் 3-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கரூர்

மணல் குவாரி

கரூர் மாவட்டம், நன்னியூர்புதூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய 2 இடங்களில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் உள்ளன. இதில் நன்னியூர்புதூர் மணல் குவாரி ஆரம்பித்த ஒருசில மாதங்களில் மூடப்பட்டது. ஆனால் மல்லம்பாளையம் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனை காரணமாக மல்லம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரியின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10-ந்தேதி நன்னியூர்புதூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய மணல்குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கடந்த 18-ந்தேதி மீண்டும் நன்னியூர்புதூர் மணல் குவாரி மற்றும் நன்னியூர்புதூர் அரசு மணல் கிடங்கு ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் மணல் அள்ளுவது தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

3-வது முறையாக சோதனை

இதையடுத்து நேற்று 3-வது முறையாக மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூர் வந்தனர். கரூர் வாங்கலை அடுத்துள்ள மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரியில் காலை சுமார் 11 மணியளவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 கார்கள் மற்றும் ஒரு டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அளவீட்டு கருவிகளுடன் காவிரி ஆற்றில் இறங்கி மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மல்லம்பாளையம் மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அதிகளவு மணல் அள்ளப்பட்டுள்ளதா? மணல் குவாரிகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கிடும் பணியானது டிஜிட்டல் சர்வே மீட்டர் அளவீட்டு கருவிகளுடன், தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் மணல் குவாரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story