வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்


வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்
x

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை

புதிய ரேஷன் கார்டு பெற...

வெளி மாநிலங்களிலிருந்து நிரந்தரமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாதவர்கள், புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு eShram என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் மனுதாரர் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் eShram மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். மேற்கண்ட மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு புதிய ரேஷன் கார்டு பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன் பெறலாம்.

எனவே, வெளி மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் ரேஷன் கார்டு இல்லாத தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story