முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்
x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜரானார்.

புதுக்கோட்டை

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக கடந்த 5-ந் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியிருந்தார். அப்போது வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-ந் தேதிக்கு தள்ளி வைத்ததோடு, அன்றைய தினம் அவரும், அவரது மனைவியும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விஜயபாஸ்கர் தனது மனைவி ரம்யாவுடன் கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார். இதற்கிடையே வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.


Next Story