முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேரின் தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும்


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேரின் தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 7:06 PM GMT)

பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேருக்கும் கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிப்படுத்துமாறு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

விழுப்புரம்

பாலியல் வழக்கில் சிறை

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் அதிகாரி அளித்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதியன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேல்முறையீட்டு மனு விசாரணை

இந்த தீர்ப்பை எதிர்த்து செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சார்பில் அவரது வக்கீல் ஹேமராஜன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதியும், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் சார்பில் அவரது வக்கீல் ரவீந்திரன் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதியும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இம்மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல்கள் வெங்கடேசன், ஹேமராஜன் ஆகியோர் ஆஜராகி, இம்மேல்முறையீடு தொடர்பாக வாதிட்டனர். பின்னர் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, இம்மேல்முறையீடு தொடர்பாக வாதிட கால அவகாசம் கேட்டனர். அதற்கு அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவித்ததோடு இருவருக்கும் கீழ்கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யுமாறு வாதிட்டார்.

அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இம்மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அன்று இம்மேல்முறையீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.


Next Story