முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 10 Feb 2023 6:46 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது

விழுப்புரம்

விழுப்புரம்

பாலியல் புகார்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.மீது தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி முதல் தொடங்கியது. இவ்வழக்கு விசாரணையானது கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

தொடர்ந்து, சென்னை சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஷாஜிதா, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேரில் ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம் முடிந்ததும் அவரிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். இந்த சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை விவரங்களை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இறுதிக்கட்டத்தை எட்டியது

இவ்வழக்கின் விசாரணை தொடங்கப்பட்ட கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 109 முறை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இதுவரை தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர், முன்னாள் உள்துறை செயலாளர், சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். அதோடு அந்த சாட்சிகளிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல்களும் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.

தற்போது இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள், குறுக்கு விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரிகளான சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நீதிபதி, விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். இன்னும் ஒரு சிலரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் இவ்வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story