ஆடுகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை


ஆடுகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை
x
தினத்தந்தி 4 July 2023 10:36 AM GMT (Updated: 5 July 2023 10:07 AM GMT)

ஊதியூர் மலையடிவார பகுதியில் தொடர்ந்து ஆடுகள் மாயமாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர்

காங்கயம்

சிறுத்தை நடமாட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.

இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள், கூண்டுகள், டிரோன் கேமராக்கள் மூலம் சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

கேமராக்கள் பொருத்தி

ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு காட்டி வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அந்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்து வந்தனர்.

மேலும் சிறுத்தையை கண்காணிக்க ஊதியூர் மலையடிவார பகுதியில் விவசாயிகள் தங்கள் தோட்டம் உள்ள பகுதியில் கேமராக்களை பொருத்தி சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் ஆடுகள் தொடர்ந்து மாயமாகி வருவது அதிகரித்து வருகிறது. மேலும் அவ்வவ்போது மாடு கன்று குட்டியையும் சிறுத்தை தாக்கி தூக்கி செல்ல முயற்சி செய்து வருகிறது. சிறுத்தையின் தொடர் வேட்டையால் ஊதியூர் பகுதி விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மாட்டு கன்று குட்டியை தூக்கி செல்ல முயன்ற சிறுத்தை அதன் உரிமையால் ஓடி வருவதை பார்த்து தப்பி ஓடியது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இரவு ஊதியூர் அருகே காசிலிங்கம்பாளையம் பகுதியில் குப்புதுரை என்பவரது ஆட்டுப்பட்டியில் ஒரு 9 மாத வெள்ளாட்டுக் குட்டியை சிறுத்தை தூக்கி சென்றது. தூக்கி சென்ற இடத்தில் சிறுத்தையின் கால்தடம் மற்றும் ஆட்டுக்குட்டியின் முடிகள் சிதறிக்கிடந்ததை வனத்துறையினர் பார்வையிட்டு உறுதி செய்தனர்.

இதுவரை சுமார் 4 ஆடுகள், 2 கன்றுக்குட்டிகள், 1 நாய் ஆகியவற்றை சிறுத்தை வேட்டையாடி உள்ளதாகவும், 2 கன்றுக்குட்டியை தாக்கி காயங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் வனத்துறையினர் சார்பில் கூறப்படுகிறது. இது தவிர பல்வேறு இடங்களில் ஆடுகள் மாயமாகியது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே சிறுத்தையின் இந்த தொடர் வேட்டையால் விவசாயிகள் தினசரி அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story