ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
x

திருவரங்குளத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி வைத்து தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

அடிக்கல் நாட்டு விழா

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் முன்னேறும் வகையில், கிராமப்புறங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். மேலும் கிராம புறங்களில் பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாலை பணிகள்

இத்திட்டத்தின் மூலம் கிராம புறங்களில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டும், புதிதாக சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

புள்ளான்விடுதி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.33.23 லட்சம் மதிப்பீட்டில் புள்ளான்விடுதி சாலை முதல் பேயன் சாலை வரை சீரமைப்பு பணிகளும், நெடுவாசல் கிழக்கு ஊராட்சியில் அண்ணா நகர் முதல் ஜீவன் சாலை வரை ரூ.66.44 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணிகளும் நடைபெற உள்ளது என்றார்.

விழாவில் புள்ளான்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், நெடுவாசல் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி, கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story