பரிசு விழுந்த லாட்டரி சீட்டுகளுக்கு பணம் கொடுக்காமல் மோசடி


பரிசு விழுந்த லாட்டரி சீட்டுகளுக்கு  பணம் கொடுக்காமல் மோசடி
x

திருச்சியில் பரிசு விழுந்த லாட்டரி சீட்டுகளுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசுகார், 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி

திருச்சியில் பரிசு விழுந்த லாட்டரி சீட்டுகளுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசுகார், 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பரிசு விழுந்த லாட்டரி

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதை மீறி வெளிமாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பரிசு விழுந்தாலும் அதை கொடுக்காமல் சிலர் மோசடி செய்து வருகிறார்கள். இது போல் திருச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்சி வரகனேரி குறிஞ்சியர் வீதியை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 28). இவர் நேற்று முன்தினம் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. இதனால் அவர், தான் லாட்டரி சீட்டு வாங்கிய நபர்களான திருச்சி பாலக்கரை எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்த மரியமெர்குலிஸ் (47), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்த முருகேசன் (37), சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த விஷ்ணு (23) ஆகியோரிடம் லாட்டரி சீட்டுக்கான பரிசு தொகையை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பரிசு தொகையை கொடுக்காமல் மோசடி செய்ததுடன், கத்தி முனையில் ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதுபோல் திருச்சி காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (53). இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு தொகையை கொடுக்காமல் மோசடி செய்ததுடன், கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3 ஆயிரத்தை பறித்து சென்றதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த அய்யனார் (40), கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஆரோக்கியசாமி (20), திருச்சி வேலன்நகரை சேர்ந்த அருண்பிரசாத் (24), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஜெகன் (22) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

சொகுசு கார் பறிமுதல்

மேற்கண்ட வழக்குகளில் 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, ஒரு சொகுசு கார், ஒரு மோட்டார் சைக்கிள், 3 கத்தி, 5 செல்போன்கள், ஒரு கேமரா, ரூ.17 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story