பட்டதாரியிடம் ரூ.11½ லட்சம் மோசடி

சாரணர் இயக்கத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி யிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்து போலி பணி ஆணை வழங்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சாரணர் இயக்கத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி யிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்து போலி பணி ஆணை வழங்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டதாரி
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 37). பட்டதாரி. இவர் மத்திய, மாநில அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இவருடைய நண்பர் மூலம் கோவை வீரகேரளத்தை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் (40) என்பவரின் நட்பு ஏற்பட்டது.
அப்போது பிரசாந்த் உத்தமன் தான் சாரணர் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், பள்ளி மாணவர்களுக்கு சாரணர் பயிற்சி அளிக்க ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்கு மத்திய அரசு மூலம் சம்பளம் வழங்கப்படும். மேலும் தனக்கு உயர் அதிகாரிகள் தெரியும் என்பதால் வேலை வாங்கி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.
ரூ.11½ லட்சம் மோசடி
அதை உண்மை என்று நம்பிய ராஜேஸ்குமார் தனக்கு அந்த வேலையை வாங்கி தரும்படி கேட்டு உள்ளார். இதற்கு பிரசாந்த் உத்தமன் ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்று கூறி உள்ளார். அதை நம்பிய ராஜேஸ்குமார் பல்வேறு தவணைகளாக ரூ.11½ லட்சத்தை பிரசாந்த் உத்தமனிடம் கொடுத்து உள்ளார்.
அவரிடம் பணத்தை வாங்கிய பிரசாந்த் உத்தமன் போலியாக பணி ஆணை வழங்கி உள்ளார். இது பற்றி விசாரித்த போது அது போலியான பணி ஆணை என்பதும், பிரசாந்த் உத்தமன் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்குமார் பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் பிரசாந்த் உத்தமன் மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். விசாரணையில், பிரசாந்த் உத்தமன் சாய்பாபா காலனியில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவது தெரிய வந்தது.






