உளுந்தூர்பேட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி


உளுந்தூர்பேட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:46 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய தந்தையை வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ். இவரும் இவருடைய மகன் அந்தோணி செல்வராஜ் (வயது 35) ஆகியோர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் அதே ஊரை சேர்ந்த பங்பிராஸ் மகன்கள் பீட்டர்பவுல், ஆரோன் ஆகிய இருவரும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு பணம் ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்தை கட்டி முடித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு, இவர்கள் கட்டிய பணத்தை மரியதாசும், அந்தோணி செல்வராஜூம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மோசடி

இதனால் பாதிக்கப்பட்ட பீட்டர்பவுல், ஆரோன் ஆகியோர் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து இந்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு மோகன் ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் மரியதாஸ், இவருடைய மகன் அந்தோணி செல்வராஜ் ஆகியோர் பீட்டர்பவுல் மற்றும் ஆரோனிடம் ரூ. 5 லட்சத்து 19 ஆயிரம் மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

கைது

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் மரியதாஸ் உள்பட 2 பேர் மீது எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி செல்வராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள மரியதாசை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story