பெரம்பலூரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு


பெரம்பலூரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x

பெரம்பலூரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில், மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பு வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்போட்டி தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி முதல் இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி ஆகும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளதால், அதற்கான மாதிரி தேர்வுகள் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காவலர் தேர்வுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ளவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஏதேனும் விவரங்களுக்கு 9499055913 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story