கறிக்கோழி வளர்ப்பு விவசாய பண்ணைக்கும் விலையில்லா மின்சாரம்


கறிக்கோழி வளர்ப்பு விவசாய பண்ணைக்கும் விலையில்லா மின்சாரம்
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 11 Feb 2023 6:46 PM GMT)

விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்குவதுபோல் கறிக்கோழி வளர்ப்பு விவசாய பண்ணைக்கும் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த மாநில ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

மாநில ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநில ஆலோசனைக்கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பூபாலன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சித்திரைச்செல்வன், ராஜப்பா, சக்திவேல், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட தலைவர் முருகன் சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், விசைத்தறி உரிமையாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்குவதுபோல் தமிழ்நாட்டில் கறிக்கோழி வளர்ப்பு விவசாய பண்ணைக்கும் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், கறிக்கோழி வளர்ப்பு தொழிலை விவசாய தொழிலாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கோழி வளர்ப்பு பண்ணைகளுக்கான நெறிமுறைகளை நமது மாநிலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும், விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கூலி நிர்ணயிக்கப்படுவதைப் போல் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வளர்ப்பு தொகை நிர்ணயிக்கவும், பண்ணையாளர்களுக்கு ஏற்படுகிற இடர்பாடுகளை களைய கறிக்கோழி வளர்ப்பு விவசாய வாரியம் அமைக்க வேண்டும், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் இளவரசன் நன்றி கூறினார்.


Next Story