23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா


23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா
x

23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் மனு மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.

இலவச வீட்டுமனைப்பட்டா

பின்னர் கலெக்டர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை செய்யப்பட்ட வாரிசுதாரர்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை 3 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைபட்டாவிற்கான ஆணைகளும் வழங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை ஒருவருக்கும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி தலா ரூ.25,000 விதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளையும் என மொத்தம் 26 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வீரர்களுக்கு பாராட்டு

அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தஞ்சை மாவட்ட வில்வித்தை சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் வெற்றி பெற்ற பதக்கங்களை காண்பித்து பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை பெற்றனர்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்புதிட்ட தனித்துணை கலெக்டர் தவவளவன், ஆதிதிராவிடர்நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


Next Story