சுற்றுலா பயணிகள் பொரித்த உணவுகளை குரங்குகளுக்கு வழங்கினால் நடவடிக்கை

சுற்றுலா பயணிகள் பொரித்த உணவுகளை குரங்குகளுக்கு வழங்கினால் நடவடிக்கை என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம், ஆசனூர், தலமலை, கேர்மாளம் பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது. குளுகுளு என இருப்பதால் திம்பம், ஆசனூர் பகுதிக்கு இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கையோடு ஒன்றி வாழும் குரங்குகளுக்கு பொரித்த உணவு பொருட்களை வழங்கி பழக்கப்படுத்தியுள்ளனர்.
பொரித்த பண்டங்களை சாப்பிடுவதால் குரங்குகள் உடல் உபாதைக்கு ஆளாகின்றன. மேலும் மசாலா பொருட்களால் ஆன சமைத்த இறைச்சிகளையும் குரங்குகளுக்கு கொடுப்பதால் அவை உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு பொரித்த பண்டங்களை தரக்கூடாது. வனத்துறையின் எச்சரிக்கையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குனர் கிருபா சங்கர் கூறியுள்ளார். இதையடுத்து சுற்றுலா பயணிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.