ஆந்திராவில் இருந்து தேனிக்கு10 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா உத்தரவின்பேரில், தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் தேனி அன்னஞ்சி விலக்கு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் வாலிபர் ஒருவர் தலையில் ஒரு மூட்டையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை போலீசார் பிடித்து அவரிடம் இருந்த மூட்டையை சோதனையிட்டனர். அதற்குள் 5 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர், பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆண்டவர் மகன் தினேஷ்குமார் என்ற டாங்கி (வயது 27) என்பது தெரியவந்தது.
லாரி, பஸ்களில் பயணம்
கஞ்சா அவரிடம் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஆந்திராவுக்கு சென்று கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்தார். மேலும், அந்த கஞ்சாவை மூட்டை கட்டிக் கொண்டு, ஆங்காங்கே லாரிகளில் உதவி கேட்டு பயணம் செய்தும், பஸ்களில் பயணம் செய்தும் கடத்தி வந்ததாகவும், அன்னஞ்சி விலக்கில் பஸ்சில் வந்து இறங்கி நடந்து சென்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






