போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் இருந்து அபேஸ் செய்யப்பட்ட ரூ.1¼ லட்சம் மீட்பு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் இருந்து அபேஸ் செய்யப்பட்ட ரூ.1¼ லட்சம் மீட்பு
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் இருந்து அபேஸ் செய்யப்பட்ட ரூ.1¼ லட்சம் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் வேடப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 65). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர், தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இணையதள பரிவர்த்தனைக்காக, அந்த வங்கி சார்பில் வழங்கப்படும் செல்போன் செயலியையும் பயன்படுத்தி வருகிறார். இந்தநிலையில் அந்த செல்போன் செயலியில் சில சிறப்பு அம்சங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், அதற்காக இந்த இணையதள லிங்க்-கை பயன்படுத்த வேண்டும் என்றும் நடராஜனின் செல்போனுக்கு வங்கியில் இருந்து அனுப்புவது போல் குறுந்தகவல் வந்தது. அதனை உண்மை என நம்பிய நடராஜன், அந்த இணையதள லிங்க்-கை பயன்படுத்தினார். அப்போது அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 800 எடுக்கப்பட்டு விட்டதாக குறுந்தகவல் வந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜன், வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது இணையதளம் மூலம் மர்மநபர்கள், அவருடைய வங்கிகணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர், திண்டுக்கல் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் முடிவில் பணத்தை அபேஸ் செய்தவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ஐ சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அந்த பணத்தை நடராஜனிடம் வழங்கினார். மேலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று நடராஜனுக்கு அறிவுரை வழங்கினார்.


Next Story