தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்துபழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு


தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்துபழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:45 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பழுதான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தேனி

வாக்குப்பதிவு எந்திரங்கள்

அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதன்படி, தேனி நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

இதற்காக, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் 'விவிபேட்' கருவிகள் ஆகியவற்றை முதற்கட்ட சரிபார்க்கும் பணிகள் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த பணிகள் கடந்த 23-ந்தேதி நிறைவு பெற்றன.

பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

பெங்களூரு பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 என்ஜினீயர்கள் குழுவினர் இந்த சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 2,885 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,754 கட்டுப்பாட்டு கருவிகள், 1,891 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றில் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 32 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 16 கட்டுப்பாட்டு கருவிகள், 64 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை பழுதாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பழுதான எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு தேனியில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, தேர்தல் பிரிவு தாசில்தார் சுகந்தா, துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர், அங்கிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவி ஆகியவை ஒரு கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


Related Tags :
Next Story