திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாள் மற்றும் சிவன், பார்வதி உள்பட பரிவார மூர்த்தி கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

யாகசாலை பூஜை

ெதாடர்ந்து இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் கணேசன் ஆகியோரிடம் காப்பு கட்டிய முத்துகுமாரசாமி பட்டர் தாம்பூலம் பெற்று யாகசாலை பூஜையை தொடங்கினார்.

கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்த பின் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு உச்சிகால பூஜை நடந்தது.

தங்கத்தேரில் சுவாமி

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபத்திற்கு வந்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதற்கிடையே சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. இரவு 7 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அங்கப்பிரதட்சணம்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி காவி, பச்சை நிற ஆடை அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடு

விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.


Next Story