சிறுவன் கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் - ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை


சிறுவன் கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் - ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x

சிறுவன் கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிய கொலை செய்ய முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலிபர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பார்த்தி என்ற பாபா பார்த்திபன் (வயது 32). நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நின்றிருந்த பார்த்திபனை, கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயன்றனர். சுதாரித்துக்கொண்ட பார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டிச்சென்று பார்த்திபனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய பார்த்திபனை தண்டையார்பேட்டை போலீசார், போலீஸ் ஜீப்பில் ஏற்றி சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்திபன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பார்த்திபன் உள்பட 6 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் கொலைக்கு பழிக்குப்பழியாக பார்த்திபன் உள்பட 6 பேரையும் கொலை செய்ய திட்டமிட்ட கும்பல், பார்த்திபன் ஜாமீனில் வெளியே வந்திருப்பதை அறிந்து அவரை சரமாரியாக வெட்டியது தெரிந்தது.

இது தொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலாஜி (22), கானா சேகர் (25), அஜித் (20) , நாகராஜ் (19), ராகுல் (20), சங்கர் (24) உள்பட11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


Next Story