பொள்ளாச்சி அருகே கொள்ளை கும்பல் கைது -58 பவுன் நகை மீட்பு


பொள்ளாச்சி அருகே கொள்ளை கும்பல் கைது -58 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

பொள்ளாச்சி அருகே கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 58 பவுன் நகை மீட்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 58 பவுன் நகை மீட்கப்பட்டது.

நகை திருட்டு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் கடந்த 9-ந்தேதி சிக்கந்தர் என்பவர், வீட்டை பூட்டி விட்டு தனது மாமனாரின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி கோட்டூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். இதற்கிடையில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மர்ம ஆசாமிகள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீராமன் (வயது 38) என்பவருக்கு திருட்டில் தொடர்பு இருப்பதும், அவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

5 பேர் கைது

அவரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் திருவரங்கம்பட்டியை சேர்ந்த மணி என்கிற பாலகிருஷ்ணன் (36), தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியை சேர்ந்த சேர்மதுரை (28) ஆகியோரை பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி நெல்லை பாளையம்செட்டிகுளத்தை சேர்ந்த அந்தோணி என்கிற அருவாபாண்டி (22), தென்காசி சாலடியூரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகியோரை ஈரோடு மாவட்டம் பவானியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைதானவர்களிடம் இருந்து 58 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் கைதான நபர்களில் ஸ்ரீராம் தவிர மற்ற 4 பேர் மீதும் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைதான 5 பேரையும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பல் சிக்கியது எப்படி ? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

சிறையில் பழக்கம்

தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீராம் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, திருட்டு வழக்கில் சிறையில் இருந்த சேர்மதுரை, பாலகிருஷ்ணன் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து 3 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீராம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையில் பாலகிருஷ்ணணும், சேர்மதுரையும், ஸ்ரீராமை தொடர்பு கொண்டு தீபாவளிக்கு பொள்ளாச்சிக்கு வருவதாக தெரிவித்து உள்ளனர். இதையடுத்து பொள்ளாச்சிக்கு வந்ததும் 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது பாலகிருஷ்ணணும், சேர்மதுரையும் கேரளாவுக்கு சென்று நகை, பணத்தை திருட செல்கிறோம் என்று கூறினர். அதற்கு போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஸ்ரீராம் கேரளாவுக்கு ஏன் செல்ல வேண்டும் பொள்ளாச்சிலேயே கைவரிசையை காட்டலாம் என்று கூறியதாக தெரிகிறது.

உல்லாச வாழ்க்கை

அதன்பிறகு சூளேஸ்வரன்பட்டிக்கு சென்று நகைகளை திருடி விட்டு, 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்று உள்ளனர். இதற்கிடையில் 3 பேரை அழைத்துக் கொண்டு நகைகளை மீட்க பாலகிருஷ்ணன் தங்கி இருந்த அறைக்கு சென்ற போது, அங்கு இருந்த அருவா பாண்டி, மணிகண்டனும் சிக்கி கொண்டனர். இதையடுத்து 5 பேரிடமும் விசாரணை நடத்திய போது திருடிய நகைகளை சேலம், சென்னையில் விற்றதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து சேலத்தில் 21 பவுனும், சென்னையில் 37 பவுன் நகையும் மீட்கப்பட்டது. திருடிய நகைகளை விற்ற பணத்தில் 5 பேரும் விலையுர்ந்த மதுபாட்டில்களை வாங்கி மது அருந்தி உள்ளனர். மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருந்து பணத்தை செலவழித்து உள்ளனர். இதில் ஸ்ரீராமை தவிர மற்ற 4 பேரும் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ஊருக்கு செல்லும் போது, போகும் வழியில் பூட்டி இருக்கும் வீடுகளில் நகை, பணத்தை திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story