2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவாரூர்

வேதாரண்யம் அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த திருச்சியை சேர்ந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வாகன சோதனை

திருவாரூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேனை போலீசார் மறித்து டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நாகை மூலக்கரை பகுதியில் இருந்து நாமக்கலில் உள்ள கோழி பண்ணைக்கு 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மூலக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு 8 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து ஆலையில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய திருச்சி சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் மணிகண்டன் (வயது21), திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (48) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனர்.

மணிகண்டன், தியாகராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன், தியாகராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நன்னிலம் கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story