வானூர் அருகேஇரட்டை கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வானூர் அருகேஇரட்டை கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

வானூர் அருகே இரட்டை கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்

இரட்டை கொலை வழக்கு

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருவக்கரை செங்கமேடு அருகே கடந்த 10.6.2023 அன்று புதுச்சேரி மாநிலம் கோர்க்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 30), பிள்ளையார்குப்பம் அருண் (28) ஆகிய இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

முன்விரோதம் காரணமாக இவர்கள் இருவரையும் கொலை செய்த புதுச்சேரி பொறையூர்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூரியபிரகாஷ் என்கிற சூர்யா (23), விழுப்புரம் அருகே இளங்காடு பழைய காலனியை சேர்ந்த சத்யராஜ் என்கிற வீரமணி (26), புதுச்சேரி ராமநாதபுரத்தை சேர்ந்த மதன்குமார் (24), விக்கிரவாண்டி அருகே வழுதாவூர் பழைய காலனியை சேர்ந்த முகிலன் (24) ஆகியோரை வானூர் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சூரியபிரகாஷ், சத்யராஜ், மதன்குமார், முகிலன் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார்.

இதையடுத்து சூரியபிரகாஷ், சத்யராஜ், மதன்குமார், முகிலன் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வானூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், வேலூர் சிறையில் இருக்கும் அவர்கள் 4 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story