வடலூர் ஏரியில் மூழ்கி சிறுமி பலி


வடலூர் ஏரியில் மூழ்கி சிறுமி பலி
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:45 PM GMT)

வடலூர் ஏரியில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

வடலூர்,

புவனகிரி அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவர் சம்பவத்தன்று தனது மனைவி பிரியா, மகள்கள் கவுசல்யா (வயது 9), கவுசிகா (7) ஆகியோருடன் வடலூர் ஞானசபைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 4 பேரும் வள்ளலாரை தரிசனம் செய்து விட்டு தர்மச்சாலையில் மதிய உணவு சாப்பிட்டனர். அதன்பிறகு 4 பேரும் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, ஞானசபை அருகே உள்ள காரப்ப ஏரிக்கு சென்று குளித்தனர். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற கவுசிகா நீரில் மூழ்கினாள். இதைபார்த்து பதறிய பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவுசிகாவை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கவுசிகா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோருடன் குளிக்க சென்ற சிறுமி ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story