கோபி அருகே கொடிவேரி அணையில் மூழ்கி சிறுமி பலி; சுற்றுலா வந்தபோது பரிதாபம்


கோபி அருகே கொடிவேரி அணையில் மூழ்கி சிறுமி பலி; சுற்றுலா வந்தபோது பரிதாபம்
x

கோபி அருகே சுற்றுலா வந்த சிறுமி கொடிவேரி அணையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கோபி அருகே சுற்றுலா வந்த சிறுமி கொடிவேரி அணையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சுற்றுலா வந்தனர்

மதுரை மாவட்டம் பாறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராசு. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் லத்திகா (வயது 11). இவர் மதுரை வீரபெருமாள்புரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் வசித்து வரும் செல்வியின் தங்கை சூர்யாவின் மகன் பிறந்தநாளை கொண்டாட நாகராசு குடும்பத்துடன் ஈரோடு வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாடி விட்டு நேற்று மாலை அனைவரும் காரில் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது லத்திகாவும், அவர்களது உறவினர் கருப்பு என்பவரின் மகள் குட்டிமாவும் (9) கொடிவேரி அணைப்பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர்.

ஆற்றில் குளித்தனர்

சிறுமிகள் 2 பேரும் அணையின் கீழ் பகுதியில் உள்ள ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். இதனால் தண்ணீரில் மூழ்கினார்கள். இதை பார்த்த அங்கே குளித்து கொண்டிருந்தவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் குட்டிமாவை உயிருடன் மீட்டனர்.

தொடர்ந்து லத்திகாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் லத்திகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர் கதறி அழுததது கல்நெஞ்சையும் கறைய வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story