பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்


பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 2 Aug 2023 8:30 PM GMT (Updated: 2 Aug 2023 8:30 PM GMT)

பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக நடந்தது. மேலும் வரத்து குறைந்தும் விலை அதிகரிக்கவில்லை.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக நடந்தது. மேலும் வரத்து குறைந்தும் விலை அதிகரிக்கவில்லை.

ஆட்டு சந்தை

பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆடி பெருக்கு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு முன்பாக நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் ஆடி மாதம் என்பதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக காணப்பட்டது. மேலும் விற்பனை மந்தம் காரணமாக வரத்து குறைந்தும் விலை அதிகரிக்கவில்லை.

ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாக உள்ளது. இதனால் பெரும்பாலும் மக்கள் அசைவ உணவுகள் சாப்பிடாமல் நோன்பு கடைபிடிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த 2 வாரமாக பொள்ளாச்சி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்து உள்ளது.

இதற்கிடையில் நாளை (இன்று) ஆடிப்பெருக்கு வருவதால் ஒரு நாளைக்கு முன்பாக சந்தை நடைபெற்றது. கடந்த வாரம் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த வாரம் அதற்கு குறைவாக வரத்து இருந்தது. விற்பனை இல்லாததால் வரத்து குறைந்தும் ஆடுகள் விலை அதிகரிக்கவில்லை. 18 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடு, வெள்ளாடு ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Related Tags :
Next Story