மோகனூர் அருகே ஆடுகள் திருட முயன்ற 4 வாலிபர்கள் மீது வழக்கு


மோகனூர் அருகே  ஆடுகள் திருட முயன்ற 4 வாலிபர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:46 PM GMT)

மோகனூர் அருகே ஆடுகள் திருட முயன்ற 4 வாலிபர்கள் மீது வழக்கு

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள கீழ் பாலப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 53). இவருடைய மனைவி சம்பூரணம், சகோதரி லோகாம்பாள், பக்கத்து வீட்டு்க்காரர் ராஜேந்திரன் ஆகியோர் கீழ்பாலப்பட்டி வாய்க்கால் கரை பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் நிதீஷ் (20), வேலு மகன் ரஞ்சித் (21), யூசுப் மகன் முகமது யூசுப் (22), சந்திரன் மகன் நிஷாந்த் (20) ஆகிய 4 பேர் சேர்ந்து வண்டியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடி கொண்டு வாகனத்தில் வைத்து தப்பி செல்ல முயன்றனர்.

இதை பார்த்த ரவிக்குமார் மற்றும் அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே 4 பேரும் ஆடுகளை விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ரவிக்குமார் 4 பேரின் வீடுகளுக்கு சென்று அவர்களது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த நதீஷ் உள்பட 4 பேர் சேர்ந்து பீர்பாட்டில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரவிக்குமார் உள்ளிட்டோரை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ரவிக்குமார் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் தலைமறைவான 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story