வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 6:47 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின

ராமநாதபுரம்


பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

பக்ரீத் பண்டிகை

பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று வாரச்சந்தையான புதன்கிழமையன்று ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலையிலேயே ஆடுகளை வளர்ப்பவர்கள் தங்களின் ஆடுகள் மற்றும் மாடுகளை அதிக அளவில் ஆட்டுச்சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் ஆட்டு வியாபாரிகள் இந்த ஆடுகளை போட்டி போட்டு காலை முதலே வாங்கத்தொடங்கினர். கடந்த ஆண்டுகளை விட நேற்று ஆடுகள் விற்பனை உற்சாகமாக காணப்பட்டது. ஆடுகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அதிக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக செம்மறி ஆடுகளை விட வெள்ளாடுகள் அதிக விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆட்டுச்சந்தை

கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் வரை விலை போன சிறிய ஆடு ரூ.8 ஆயிரம் எனவும், ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையான சற்று பெரிய ஆடு அதன் எடைக்கேற்ப நேற்று ரூ.11 ஆயிரம் வரை விலைபோனது. ஒட்டுமொத்தமாக நேற்று ஒருநாளில் ராமநாதபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆட்டுச்சந்தையில் வாங்கிய ஆடுகளை சரக்கு வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் வைத்து கொண்டு சென்றதை காணமுடிந்தது. அதிகாலையில் தொடங்கிய ஆட்டுச்சந்தை காலை 10 மணிக்கு முன்னதாகவே அனைத்து ஆடுகளும் விற்று தீர்ந்தது.


Next Story